திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என்பது இருவர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நிம்மதியையும் பாதிக்கும். கணவன்-மனைவிக்குள் நம்பிக்கையின்மை, தகராறு, பிரிவு போன்ற பிரச்சினைகள் உருவாகும். சில நேரங்களில் இதுபோன்ற உறவுகள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களுக்கும் காரணமாகின்றன.
ஆரணி அருகே படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான ரமேஷ். இவருக்கு 26 வயதான லட்சுமி என்ற மனைவ்வியும், 10 வயதான ஹரிஷ் என்ற மகனும், 5 வயதான சதன்யா என்ற மகளும், 3 வயதான மதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், 32 வயதான மதிவாணன் என்ற நபர் ஒருவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், லட்சுமி நான்காவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அவரது கணவர் ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, லட்சுமியின் கள்ளத்தொடர்பு குறித்து ரமேஷ் கண்டுபிடித்துள்ளார். மேலும், இந்தக் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல, இது என்னுடைய குழந்தை இல்லை என்று கூறி லட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் லட்சுமி தனது குழந்தைகளை விட்டுவிட்டு அவரது கள்ளக்காதலனான மதிவாணன் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே, மதிவாணனின் தாய்க்கும் லட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது குழந்தையை எப்படி வளர்ப்பது என்று லட்சுமிக்கு தெரியவில்லை. இதனால் அவர் தான் பெற்றெடுத்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும், குழந்தையின் சடலத்தை ஒரு கட்டைப் பையில் வைத்து, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மதிவாணன் மற்றும் அவரது தாய் மீது புகார் அளிக்க லட்சுமி சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் சடலத்துடன் ஆரணி, சந்தவாசல், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர், குழந்தையின் சடலத்தை எவ்வாறு புதைப்பது என்று தெரியாமல் இருந்த லட்சுமி, ஒருவரிடம் ₹500 தருவதாகக் கூறி, குழந்தையின் சடலத்தை ஆற்றில் புதைக்கச் சொல்லியுள்ளார். அந்த நபரும் ₹500 பெற்றுக்கொண்டு சடலத்தை ஆற்றில் புதைத்துள்ளார்.
இதற்கிடையில், லட்சுமி இடம் குழந்தை எங்கே என்று ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு லட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள், உடனடியாக சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது லட்சுமி, தான் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சந்தவாசல் போலீசார் லட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: கொடூரத்தின் உச்சம்!! பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தை…



