தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை நிலைநாட்ட தவறியதோடு, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக கூறி தவெக அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வரை ரூ.2,500 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாக சிறப்பு நிவாரணத் தொகுப்பை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் விஜய் அமைதி காப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்திப்பதற்காக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் அம்மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகும் தகவல்கள், மேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தவெக அரசு இந்த விவகாரத்தில் தனது மௌனத்தைக் கலைத்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயச் சங்கங்கள் மற்றும் அனைத்துக் எதிர்க்கட்சிகளும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Read More : BREAKING | வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் ஜெயில்..!! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது மசோதா..!!



