தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் உதயநிதியை அவரது இல்லத்திலேயே வைத்துப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். உதயநிதியை கைதை கண்டித்துப் மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் இன்றே விசாரணையை முடித்து அவரை விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்திலேயே பயணித்த உதயநிதி, கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும், திட்டமிட்ட இடத்திற்கு மாறாக வேறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை ஏற்க முடியாது என்றும் கூறி காவல் வாகனத்தை விட்டு இறங்க உதயநிதி மறுப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மண்டலக் காவல் தலைவர் (ஐஜி) பாலகிருஷ்ணன், உதயநிதியிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரே வாகனத்திலிருந்து கீழே இறங்கிய உதயநிதி, அங்குக் காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு விசாரணைக்கு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தார்.
தற்போது தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில், ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் உதயநிதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், காவல் நிலையத்திற்கு வெளியே திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருவதால் அங்குத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Read More : Red Alert | 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!



