தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய்சி (eKYC) பதிவு முகாம் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர்களின் விரல் ரேகை அடிப்படையிலான eKYC சரிபார்ப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையேற்று, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த இ-கேஒய்சி பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போதைய தகவல்களின்படி, மாநிலத்தில் உள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகளில் சுமார் 95.86 சதவீதப் பயனாளிகளுக்கு விரல் ரேகை சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. நிலுவையில் உள்ள எஞ்சிய பதிவுகளையும் 100 சதவீதம் முழுமையாக விரைந்து முடிக்கும் நோக்கில், இந்த இரண்டு நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 8, 9 ஆகிய இரண்டு தினங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் இக்கட்டாய சிறப்பு முகாம்கள் செயல்படும். எனவே, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இ-கேஒய்சி பதிவை உடனே முடித்துக் கொள்ளுமாறு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Read More : சிறையில் இருந்து விடுதலை ஆனார் திமுக MLA மார்க்கண்டேயன்..!! வெளியே வந்ததும் பரபரப்பு பேட்டி..!!



