தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதத்தில் பெய்த பரவலான மழை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு கணிசமாக குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு 254.9 மில்லிமீட்டராக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கமான அளவில் 94 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக எல் நினோவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் திருப்திகரமான மழை பதிவானது. இருப்பினும், தற்போது அந்தச் சாதகமான சூழல் மாறி, தென்மேற்கு பருவமழை வேகமாகக் பலவீனமடைந்து வருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த நிலவரம் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், வடமேற்கு, வடகிழக்கு, கிழக்கு-மத்திய மாநிலங்கள் மற்றும் கிழக்கு தீபகற்பத்தின் சில பகுதிகளில் மட்டும் இயல்பான மழை பெய்யக்கூடும். நாட்டின் இதர பெரும்பான்மையான பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களை உள்ளடக்கிய பருவமழையின் இரண்டாம் பகுதியில் ஒட்டுமொத்த மழைப்பொழிவு சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதால், வழக்கமான கூட்டு சராசரியான 422.8 மில்லிமீட்டரை எட்டுவது சவாலாகவே இருக்கும்.
தற்போது மிதமான வேகத்தில் தொடங்கி இருக்கும் எல் நினோ காரணி, செப்டம்பர் மாதத்தில் மேலும் வீரியமடையக்கூடும் என்று உலகளாவிய காலநிலை மாதிரிகள் எச்சரிக்கின்றன. மேலும், இதன் தாக்கம் வரும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், நாட்டின் விவசாய உற்பத்தியும் குடிநீர் ஆதாரங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பருவமழையை மட்டுமே முதன்மையாக நம்பியிருக்கும் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : TN Budget | ஒரு ரூபாய் கணக்கு..!! தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானமும்.. செலவுகளும்..!!



