தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். ஒவ்வொரு புதிய ஆட்சியிலும் முந்தைய நல்ல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதும், மேம்படுத்தப்படுவதும் வழக்கமான நடைமுறைதான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் நிதிநிலை குறித்துப் பேசிய அமைச்சர், “அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு எவ்வித தொலைநோக்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் போன்ற முக்கியப் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே நிதி நெருக்கடியில் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டுச் செல்லப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இந்த நிறுவனங்களைச் சீரமைத்து, மாநிலத்தின் நிதிநிலையை உயர்த்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.
விவசாயிகள் நலன் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ரூ.75,000 வரையிலான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏழை எளிய பெண்களுக்கு நேரடியாக பயனளிக்கும் தாலிக்குத் தங்கம் மற்றும் தங்க மோதிரம் வழங்கும் திட்டங்கள் மீண்டும் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டட்டார்.
சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் காவிரி விவகாரம் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பேரவையில் முதல்வரைப் புகழ்ந்து பேசுவதற்குச் சபாநாயகர் தடைகேதும் விதிக்கவில்லை என்றும், ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருந்தால் மட்டுமே அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்க சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ வழிமுறைகளையும் அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Read More : உங்கள் வீட்டில் மறந்தும் கூட இந்த நாளில் தீபம் ஏற்றாதீர்கள்..!! பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்..!!



