ஒரு காலத்தில் பெற்றோரின் வயதான காலத்தை தங்களின் பொறுப்பாக நினைத்த பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் பெற்றோருக்கான அன்பும், அரவணைப்பும், பொறுப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மும்பையைச் சேர்ந்த முன்னாள் துணி வியாபாரி ஒருவரின் மரணம்.
மும்பையைச் சேர்ந்த சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, தனது மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவர்களில் இருவர் ஆசிரியர்களாகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மகள்களின் எதிர்காலத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த தந்தை, தனது வயதான காலத்தில் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
நோயால் பாதிக்கப்பட்டு, இறுதி நாட்களில் உடல்நிலை மோசமடைந்தபோதும், மகள்கள் அவரை நேரில் வந்து பார்க்கவில்லை. இறுதியில் அவர் உயிரிழந்தபோதும், அவரது இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் இருந்த மகள்கள் வீடியோ கால் மூலமாகவே தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதில், இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு மகள், “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்” எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு மகள் நேபாளத்தில் இருந்து ரூ.5,100-ஐ ஆன்லைனில் அனுப்பி, தந்தையின் இறுதிச்சடங்கை முறையாக நடத்துமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தந்தையின் இறுதி நிகழ்வுகளை முதியோர் இல்ல நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களுமே முன்னின்று நடத்தினர். குடும்பத்தின் விருப்பத்தின் அடிப்படையில் குப்தாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ஆனால், அவரது சாம்பலைப் பெறுவதற்குக்கூட தங்களால் வர முடியாது என்றும், அதனை கங்கையில் கரைத்துவிடுமாறும் மகள்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தன் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் உழைத்த ஒரு தந்தைக்கு, இறுதியில் அருகில் இருந்து ஆறுதல் சொல்லக்கூட பிள்ளைகள் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் வயதாகும்போது அவர்களுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமல்ல; நேரம், அன்பு, அரவணைப்பு மற்றும் அருகில் இருக்கும் மனிதர்களின் ஆதரவும் தான்.
வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற ஓட்டத்தில், நம்மை உயர்த்தியவர்களை மறந்துவிடக்கூடாது என்பதையே இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. பெற்றோரின் அன்புக்கு விலை நிர்ணயிக்க முடியாது; அதேபோல், அவர்களின் வயதான காலத்தில் நாம் காட்டும் அன்புக்கும் மாற்று எதுவும் இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Also Read: குறைந்த செலவில் அதிக புரதச்சத்து வேண்டுமா?… சோயா சங்க்ஸில் இந்த 4 உணவுகளை செய்து பாருங்க!



