இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்க காலத்தில் பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை சார்ந்திருந்த இந்தியா, தற்போது வணிக ரீதியாக 36 நாடுகளைச் சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை தனது சொந்த ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி மகத்தான சாதனை படைத்துள்ளது. சமீபத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது கூட 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தியாவின் இரண்டாவது சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தின் நிர்வாகத்தை, ரூ.986 கோடி மதிப்பில் இந்தியத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACe) அமைப்பு தொடங்கியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் இலங்கையைச் சுற்றி வளைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், குலசேகரன்பட்டினத்திலிருந்து ஏவப்படும் போது அவை நேரடியாக இந்தியப் பெருங்கடலின் மேல் பயணிக்கும். இதனால் எரிபொருள் பெருமளவில் சேமிக்கப்படுவதோடு, அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களையும் சுலபமாக சுமந்து செல்ல முடியும். இந்த ஏவுதளத்தைக் கையாளத் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளை இஸ்ரோ வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!



