நடிகரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சரத்குமார், தன்னை எளிதில் காண்பதற்கு ஆதரவாளர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆதரவாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சரத்குமார், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
தமது எண்ண ஓட்டத்தில் திடீரென தோன்றிய யோசனையே இதுவென குறிப்பிட்ட அவர், ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக் கொள்வது ஒரு குடும்ப அடையாளமாக இருக்கும் என்றும், தன்னை காண வரும் தொண்டர்களுக்கு இதுவொரு ‘கிரீன் கார்டு’ போன்று செயல்பட்டு தன்னை நேரடியாகவும், எளிதாகவும் சந்திக்க உதவும் என்று தெரிவித்தார்.
சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘நாட்டாமை’ திரைப்படத்தின் பெயரை தமது ஆதரவாளர்களின் அடையாளமாக அவர் தேர்வு செய்துள்ளார். தொண்டர்களையும், ரசிகர்களையும் கவரும் வகையில் அவர் முன்வைத்துள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Read More : திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் தொண்டர்கள் அதிர்ச்சி..!!



