காதல் என்ற பெயரில் நம்பிக்கை ஏற்படுத்தி 16 வயது சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து, பின்னர் பணத்துக்காக விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, பின்னர் எதிர்பாராத சூழலில் சிக்கியுள்ளார். அங்கிருந்து தப்பிக்க வழியின்றி தவித்த அவர், இறுதியில் போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இளைஞர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு ஷபிகுல் மொல்லா (20) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தொடர்ந்து காதல் வார்த்தைகளைப் பேசி, அவரது நம்பிக்கையை ஷபிகுல் மொல்லா பெற்றுள்ளார். இதனால் அவரை காதலிப்பதாக நம்பிய சிறுமி, சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சிறுமியை கொல்கத்தா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணத்துக்காக அவரை விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். பின்னர் கொல்கத்தாவில் இருந்த சிறுமி, போலீஸ் உதவி எண்ணையும் குழந்தைகள் உதவி எண்ணையும் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கண்ணீருடன் கேட்டுள்ளார். சிறுமி தெரிவித்த தகவல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் போலீசார் உடனடியாக அங்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷபிகுல் மொல்லா மற்றும் சஹருல் லஸ்கர் (39) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை எவ்வாறு அழைத்து வந்தனர், பணத்துக்காக அவரை யாரிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி… 6 மாதங்களுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி உண்மை!



