சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சியில் ‘ஆக்ஷன்’ மட்டுமே இருந்தது; ‘ஆக்டிங்’ இல்லை. தவெக ஆட்சியில் எதையும் ரீல்ஸ் கண்டெண்ட் போலப் பேசி வருகிறீர்கள்” என விமர்சித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “இந்தத் தொழில்நுட்பத்தை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடமிருந்து கற்றுக்கொண்டேன்” என குறிப்பிட்ட போது, முதல்வர் விஜய் உட்பட அவையிலிருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், “முந்தைய ஆட்சியில் ரூ.350 கோடியில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெல் கொள்முதல் மற்றும் வாகனப் போக்குவரத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் எதிர்க்கட்சியினரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதுமட்டுமின்றி, கரும்புத் தோட்டத்திற்குள் கான்கிரீட் பாதை அமைத்து நடந்த முக்கிய விவசாயி ஒருவரைப் பற்றிப் பேச அண்ணன் மறந்துவிட்டார்” என கூறினார்.
அவையை மேலும் கலகலப்பாக்கும் வகையில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சியில் அதிகாலையிலேயே முதல்வரிடமிருந்து அழைப்பு வந்து விடுமோ என்ற பதற்றத்திலேயே 5 ஆண்டுகளைக் கழித்தோம்; ஆனால் நீங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறீர்களே” என்றார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “சின்ன வாய்க்கால் பிரச்சனை என்றால் கூட முதல்வரே நேரடியாக தொடர்பு கொண்டு கேள்வி கேட்கிறார். நாங்களும் தினமும் பயத்துடனே தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தார். உடனே, “புஸ்சி ஆனந்த், எப்போதும் பிஸியான ஆனந்தாகத்தான் இருக்கிறார்” என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியதால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
Read More : ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றமா..? அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!! கூட்டுறவுத்துறை அதிரடி..!!



