வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாகவே இந்த புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை 5.30 மணியளவில் கணிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நிலைக்கொண்டுள்ளது.
வரும் 48 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறித்த மாற்றங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.


