சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவுக்கு வாக்களிக்காத பொதுமக்களை சாபமிடும் வகையில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டைக்கு கொண்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் வாக்களித்திருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்றும் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக பொதுமக்களை இழிவுபடுத்துவதும், சாபமிடுவதும் தான் திமுக-வின் அரசியல் நாகரிகமா? என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியினர், அரசு திட்டப் பயனாளிகள் மற்றும் பெண்களை தொடர்ந்து அவமதித்துப் பேசி வந்த திமுகவினர், தற்போது வாக்களித்த மக்களையே சாபமிடும் நிலைக்கு சென்றிருப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுவதாக சாடியுள்ளார்.
மக்கள் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றியதற்கான காரணங்களில் இத்தகைய ஆணவப் பேச்சுகளும் ஒன்று என்பதை அக்கட்சியினர் உணர வேண்டும் என்றும், பொதுமேடைகள் தங்களது சொந்த வீடுகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மக்களின் வாக்குரிமையை மதித்து அரசியல் நாகரிகத்துடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Read More : கோவை என்ன பாகிஸ்தானிலா இருக்கு..? தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச்செயலா? தவெக அரசை விளாசிய ஐகோர்ட்..!!



