சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளின் களப்பணி மற்றும் பயண சிரமங்களைச் சுட்டிக்காட்டி வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், தமக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் 280 கி.மீ தொலைவிலிருந்து வாடகை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியே அவைக்கு வருவதாக தெரிவித்தார். மேலும், 40 கி.மீ சுற்றளவு கொண்ட தொகுதிக்குள் மக்களின் குறைகளைக் கேட்டறியவும், தனிச் செயலாளர் ஒருவரை நியமித்து ஊதியம் வழங்கவும் பொருளாதார வசதியின்றி பெரும்பாலான உறுப்பினர்கள் சிரமப்படுவதை சுட்டிக்காட்டினார். நேர்மையான மற்றும் ஊழலற்ற மக்கள் சேவையை உறுப்பினர்கள் முழுமையாக முன்னெடுக்க ஏதுவாக, அவர்களுக்குத் தேவையான வாகன வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு செய்து தர வேண்டும் எனச் சபாநாயகரிடம் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கோரிக்கைக்குப் பதிலளித்த சபாநாயகர், மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாக பணியாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உணர்ந்து கொள்வதாகவும், அவையிலேயே இருக்கும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு இக்கோரிக்கையை நேரடியாக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, முதன்முறையாகத் தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு வாகனம் வழங்குவது குறித்தும், அவர்களின் பணிகளுக்கு உதவியாளர் ஒருவரை நியமிப்பது குறித்தும் அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மக்கள் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வழிவகுக்கும் இந்த முன்னெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஆதரியுங்கள்!. எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறைகூவல்!.



