மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசீத் பானர்ஜி (74), பீர்பும் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கட்சி அலுவலகம் ராம்பூர்ஹட் நகரில் அவரது இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காவல்துறையினர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், சம்பவ இடத்திலிருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரான அசீத் பானர்ஜி, ஜூலை 2021 முதல் மே 2026 வரை மேற்கு வங்க சட்டமன்றத்தின் 13வது துணை சபாநாயகராக பணியாற்றினார். ராம்பூர்ஹட்டில் பிறந்த இவர், வர்தமான் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டம் பெற்றவர் மற்றும் ராம்பூர்ஹட் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பள்ளி கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2001 முதல் 2021 வரை ராம்பூர்ஹட் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்ற அவர், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் துருபா சாகாவிடம் 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் விலகி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஜூன் மாதம் பீர்பும் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கோட்டைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



