தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் 10 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாய பயன்பாடின்றி காலியாக உள்ள கோயில் நிலங்களைக் கண்டறிந்து, அதன் முழு விவரங்களையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு கண்டறியப்படும் நிலங்களில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை அமைத்து, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்குவதன் மூலம் திருக்கோயில்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கோயில் சொத்துகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதோடு, பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருக்கோயில்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் முறையாக அளவீடு செய்து, எல்லைகளில் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : வெட்கங்கெட்ட ஆபாசநிதி.. அறிவில்லாத அறிவாலயத்தார்..!! உதயநிதியை கிழித்த தவெக ஐடி விங்..!!



