அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் ‘சேவ் அமெரிக்கா’ (SAVE America Act) சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, இந்தியாவின் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை நடைமுறையை அவர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார்; செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடியும்? இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும்; எனவே ‘சேவ் அமெரிக்கா’ சட்டத்தை நாம் உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டிரம்ப் கூறுவது முற்றிலும் சரியானது என்று கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த தேர்தலில் வாக்களித்த 64.6 கோடி மக்களும் கட்டாயமாக அடையாள அட்டையைப் பயன்படுத்தினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் கூட்டாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கப் பதிவு செய்யும்போது, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற குடியுரிமைக்கான சான்றுகளைக் கட்டாயமாக்குவது, அஞ்சல் வழி வாக்களிப்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது ஆகியவற்றை இந்த ‘சேவ் அமெரிக்கா’ மசோதா முன்மொழிகிறது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க இத்தகைய கடுமையான சட்டங்கள் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



