மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக பெரும் மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை மற்றும் மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் என். செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 9 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேகதாது திட்டம் அமைக்கப்பட்டால், அது காவிரி நீர் பகிர்வு தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்கும் என்று அம்மாநில அரசு கருதுகிறது.
தற்போது காவிரி ஆற்றில் 12,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 10,000 கனஅடி நீர் கபினி அணையில் இருந்து தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
மேகதாது திட்டத்தின் கட்டமைப்பு அம்சங்கள்:
கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்திலுள்ள கனகபுரா பகுதிக்கு அருகே, பிலிகுண்டுலுவில் இருந்து 8 கி.மீ. தொலைவில் காவிரி மற்றும் அர்க்காவதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த பன்நோக்குத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த அணையால் 64 டிஎம்சி நீர் சேமிக்க முடியும். இத்திட்டத்தில் 99 மீட்டர் உயரமும் 735 மீட்டர் நீளமும் கொண்ட கான்கிரீட் புவிஈர்ப்பு அணையும், நிலத்தடி மின்நிலையம் மற்றும் நீர் கடத்தும் அமைப்புகளும் இடம்பெறவுள்ளன.



