மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்மண்டல கவுன்சிலின் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் குழுத் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு, பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் முதலீடுகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, அண்மைக்காலமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் சூழலில், இரு மாநில முதல்வர்களும் ஒரே மேடையில் பங்கேற்கும் இந்த மாநாடு தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை புறப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து கோவளம் செல்லும் அவர், அங்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தென் மாநில முதல்வர்களுடன் இரவு நடைபெறும் முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
Read More : குழந்தைகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் இருக்க இது தான் காரணமா? நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!



