கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சொகுசு கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஊத்தங்கரை காவல்துறையினர் சினிமா பாணியில் தீவிர வியூகம் அமைத்து 750 கிலோ குட்கா மற்றும் 3 சொகுசு வாகனங்களைப் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
குட்கா கடத்தலை தடுக்க ஊத்தங்கரை உட்கோட்ட டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடத்தல் கும்பலைச் சுற்றி வளைக்கும் நோக்கில், எம்.ஜி.ஆர் நகர் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டது போன்று ஜே.சி.பி மற்றும் சரக்கு வாகனத்தைக் குறுக்கே நிறுத்திப் பாதையை தற்காலிகமாக மறித்து காத்திருந்தனர்.
அப்போது அப்பகுதியில் அதிவேகமாக வந்த 3 சொகுசு கார்களில், முன்னால் சென்ற வாகனம் காவல்துறையின் தடுப்பைக் கண்டு சுதாரித்துக்கொண்டு, தப்பிக்கும் நோக்கில் வாகனத்தை உடனடியாகப் பின்னோக்கித் திருப்ப முயன்றது. எனினும், முன்கூட்டியே திட்டமிட்டிருந்த காவல்துறையினர் பின்னால் ஒரு டிப்பர் லாரியைக் கொண்டு சாலையை முற்றிலுமாக அடைத்தனர்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீடித்த சேஸிங்கில், தப்பியோட முயன்ற கடத்தல் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரியின் மீது மோதி நின்றது. இதனால் பின்னால் வந்த மற்ற இரு சொகுசு வாகனங்களும் நகர முடியாமல் மேம்பாலத்திலேயே மாட்டிக்கொண்டன.
இதனையடுத்து உடனடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர், வாகனங்களில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (29), பஜன்லால் (26) மற்றும் தினேஷ் (20) ஆகிய மூவரை அதிரடியாகக் கைது செய்தனர். எனினும், வாகனங்களில் இருந்த மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய மற்ற நபர்களை பிடிக்க ஊத்தங்கரை காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Read More : அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு..!! CM விஜய்க்கு முக்கிய பொறுப்பு..!!



