தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே 3 பேருடன் சென்ற கார், தனக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே குமுளியில் இருந்து தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் இடித்து சாலையோர சுவற்றில் மோதியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவத்திற்கு விரைந்து வந்த தேனி போலீசார், காரில் விபத்தில் சிக்கிய அமச்சியாபுரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் முத்துக்குமார்(50), அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (55), கந்தவேலு (52) ஆகிய 3 பேரை மீட்டனர். அதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
மேலும் படுகாயம் அடைந்த வேலுச்சாமி மற்றும் கந்தவேலுவை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், வேலுச்சாமி செல்லும் வழியிலே உயிரிழந்தார். கந்தவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
முதற்கட்ட விசாரணையில் காரில் வந்த நபர்கள் அதிவேகமாக காரை ஓட்டி வந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



