சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் நகைக் கடன் தொகையை கணிசமாக உயர்த்துவதற்குத் தமிழகக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 1,454 நகர்ப்புற வங்கிக் கிளைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கீழ் இயங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கச் சங்கங்கள் என மொத்தம் 22,793 கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் தற்போது 22 காரட் ஆபரணத் தங்கத்திற்கு ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.8,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கி வருவதால், அவசர நிதித் தேவைக்காக பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடும் நிலை நீடிக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு அமைப்புகளிலும் நகைக்கடன் மதிப்பீட்டுத் தொகையை நடப்புத் தங்க விலைக்கு ஏற்ப உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஒப்புதல், வரவிருக்கும் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், அவசர மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணம், விவசாயத் தேவைகள் மற்றும் குடும்பச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படும் பொதுமக்கள் குறைந்த எடையுள்ள நகைகளை அடமானம் வைத்தே அதிகளவிலான கடன் தொகையைப் பெற முடியும். மேலும், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் அடகுக் கடைகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் ஏழை, எளிய மக்கள் சிக்குவது தடுக்கப்படுவதோடு, சிறுகுறு வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் தங்களின் தினசரி மூலதனத் தேவைகளை மிகக் குறைந்த வட்டியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இது வழிவகுக்கும்.



