காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞரால் ஏற்பட்ட தொடர் தொல்லை, கர்நாடகாவில் 22 வயது பெண்ணின் உயிரிழப்பில் முடிந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவமொக்கா பகுதியில் உள்ள பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வாணிஸ்ரீ (22). கல்லூரிப் படிப்பை முடித்த இவர், பெங்களூருவின் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
கல்லூரியில் படித்தபோது அபிஷேக் என்பவருடன் வாணிஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படும் நிலையில், அபிஷேக்கின் காதலை வாணிஸ்ரீ ஏற்கவில்லை. இதனால் அவரிடம் தொடர்ந்து தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி அபிஷேக் மிரட்டத் தொடங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் மிரட்டல்களால் வாணிஸ்ரீ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. குடும்பத்தினருக்கு இதனால் அவமானம் ஏற்படும் என்ற அச்சமும் அவரை பாதித்ததாக தெரிகிறது. இதனிடையே, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அருகில் இருந்த ஏரியில் குதித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாணிஸ்ரீயின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது கிடைத்த கடிதத்தின் அடிப்படையில், அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படும் மிரட்டல் மற்றும் தொல்லைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பதாகவும், குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் அந்தக் கடிதத்தில் வாணிஸ்ரீ குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை மிரட்டிய நபருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அபிஷேக்கிற்கு எதிராக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டுதல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக போராடாமல், உடனடியாக குடும்பத்தினர் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளின் உதவியை நாடுவது முக்கியம்.
Also Read: பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பயங்கர தீ விபத்து! 3 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாப பலி…


