கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், லதாவுக்கும் 65 வயதான முனிவேல் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. வயது முதிர்வு காரணமாக இந்த உறவைத் தொடர விரும்பாத லதா, முனிவேலிடம் இருந்து விலக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முனிவேல், லதா தூங்கிக் கொண்டிருந்தபோது சுத்தியலால் அவரது தலையில் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த லதா உயிரிழந்துள்ளார்.
கொலைக்குப் பிறகு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து முனிவேல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் லதாவின் உடல் வீட்டிற்குள் சில நாட்கள் இருந்த நிலையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முனிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக நீடித்த கள்ளக்காதல் உறவை முடித்துக்கொள்ள பெண் எடுத்த முடிவு, இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: 50 வயதில் வாலிபருடன் காதல்: ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!



