குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து பெற்றோரிடையே உள்ள முக்கிய கவலையைத் தீர்க்கும் வகையில், இந்தியாவில் புதிய மருந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், குளோர்பெனிரமைன் மாலெட்டும் (chlorpheniramine maleate) பெனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடும் (phenylephrine hydrochloride) கலந்த கலவை மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துக் கலவையை இந்த வயதுப் பிரிவினருக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை வாசகத்தை உற்பத்தியாளர்கள் கட்டாயம் அச்சிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நிபுணர் குழுக்கள் மற்றும் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் வாரியத்தின் (DTAB) பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய கலவை மருந்துகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று அவை முடிவு செய்துள்ளன. மேலும், பாதுகாப்பான மாற்று மருந்துகள் இருப்பதாகவும் அரசாங்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய குழந்தைகளுக்கு சளி மருந்துகள் ஏன் கவலைக்குரியவை?
ஆஸ்டர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த குழந்தை நல ஆலோசகர் டாக்டர். ராஜீவ் எம்.ஆர் கூறுகையில், குழந்தைகளுக்கான மருந்துகளை பரிந்துரைக்கும்போது அவர்களை ‘சிறிய வயது பெரியவர்களாக’ கருதக்கூடாது என்று கூறுகிறார். “ஒரு பெற்றோராக நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலின்றி குழந்தைகளுக்கு எந்தவொரு இருமல் மற்றும் சளி மருந்துகளையும் கொடுக்கக்கூடாது. பல குழந்தை பருவ நோய்கள் வைரஸ் தொற்றால் ஏற்படுபவை மற்றும் அவை தன்னிச்சையாகவே குணமாகிவிடும். எனவே பல குழந்தைகளின் சளி அறிகுறிகளுக்கு எந்த மருந்தும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
குளோர்பெனிரமைன் என்பது ஒரு ஆன்டிஹிஸ்டமைன் ஆகும், அதே நேரத்தில் பெனிலெஃப்ரின் என்பது ஒரு டீகென்ஜெஸ்டன்ட் (மூக்கடைப்பு நீக்கி) ஆகும். இந்த இரண்டும் கலக்கப்படும்போது, நெரிசல் மற்றும் ஒவ்வாமை தொடர்பான புகார்களை தீர்க்க அவை உதவுகின்றன. இருப்பினும், மருந்து பாதுகாப்பு, சரியான அளவு மற்றும் நன்மைகள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளுக்கு இடையிலான சமநிலை ஆகியவை வயது பிரிவுகளுக்கு இடையே கணிசமாக வேறுபடலாம்.
எனவே, குழந்தைகளுக்கான மருந்துகளை கவனமாக தேர்ந்தெடுத்து, அளவிட வேண்டும் என்பதை இந்தக் கட்டுப்பாடு ஒரு முக்கியமான நினைவூட்டலாகக் கொண்டுவருகிறது. “லேபிள்களைப் படித்து, சரியான அளவு மற்றும் வயதுப் பிரிவினருக்கு மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
பெற்றோர்கள் சுயமாக மருந்து கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்:
பெற்றோர்கள், குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, மருத்துவ ஆலோசனை இல்லாமல் இருமல் அல்லது சளி மருந்துகளை கொடுக்கக்கூடாது.
பல குழந்தைப் பருவ சளித் தொல்லைகள் வைரஸ்களால் ஏற்படுகின்றன மற்றும் ஆதரவான பராமரிப்புடன் தாங்களாகவே குணமாகின்றன. கலப்பு மருந்தைக் கொடுப்பது, குழந்தைகளுக்குத் தேவையில்லாத சேர்மங்களுக்கும் அவர்களை உட்படுத்தக்கூடும். “மற்றொரு கவலை தற்செயலான இரட்டிப்பு (accidental duplication) ஆகும். பெற்றோர்கள் மருந்து லேபிள்களை கவனமாகப் படிக்கவில்லை என்றால், ஒரே மாதிரியான செயலில் உள்ள மூலப்பொருலைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்புகளைக் குழந்தை பெறலாம். இது தற்செயலான அதிகப்படியான அளவின் அபாயத்தை அதிகரிக்கும்” என்று டாக்டர் ராஜீவ் கூறினார்.
எனவே பெற்றோர்கள் ஒவ்வொரு மருந்திலும் உள்ள செயலில் உள்ள மூலப்பொருட்கள், பரிந்துரைக்கப்பட்ட வயது மற்றும் அளவைச் சரிபார்த்து, குழந்தை மருத்துவர் அல்லது தகுதியான சுகாதார நிபுணரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
பெற்றோர்கள் எப்போது மருத்துவ உதவி நாட வேண்டும்?
வழக்கமான சளிக்கு மருந்து தேவைப்படாது. இருப்பினும், குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ச்சியான அல்லது அதிக காய்ச்சல், சரியாக உணவு உட்கொள்ளாமை, அதிகப்படியான தூக்கம், நீரிழப்புக்கான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் மேம்படுவதற்குப் பதிலாக மோசமடைந்து வருதல் போன்ற நிலை ஏற்பட்டால் மருத்துவக் கவனம் முக்கியம்.
உடன் இருக்கும் பிற மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை தேவைப்படலாம். புதிய கட்டுப்பாடுகள் பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக அல்ல. மாறாக, அவை குழந்தை ஆரோக்கியம் மற்றும் மருந்துப் பாதுகாப்பின் ஒரு முக்கிய கொள்கையை வலுப்படுத்துகின்றன.
சரியான சிகிச்சையானது குழந்தையின் வயது, அறிகுறிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது. பெற்றோர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இருமலுக்கும் அல்லது சளிக்கும் மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதைத் தவிர்ப்பது, மூலப்பொருட்களைச் சரிபார்க்காமல் மருந்துகளைக் கலக்காமல் இருப்பது மற்றும் அறிகுறிகள் கடுமையாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாகவோ இருக்கும்போது தொழில்முறை ஆலோசனையைப் பெறுவதுமே பாதுகாப்பான அணுகுமுறையாகும்.



