தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரினர். ஆனால், அக்கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
அதன்படி, இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என முறையிட்டனர்.
அதேவேளையில், காணொலி வாயிலாக விசாரணையில் ஆஜரான சங்கீதா, வழக்கின் முக்கியத்துவம் கருதி இன்றே விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றதால் இந்த வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றம் முடித்து வைத்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி சுஜாதா சுமார் 15 நிமிடங்கள் சங்கீதாவிடம் விசாரணை நடத்திய நிலையில், இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.



