மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பள்ளி நேரத்தின்போது மாணவிகளை பாத்திரங்களைக் கழுவ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜா கச்சார் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோவில், மாணவிகள் பாத்திரங்களைக் கழுவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை, கல்வியோடு தொடர்பில்லாத இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலானதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வட்டார கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் சித்தாந்த் பாக்டே கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். அவர்களின் விளக்கமும் விசாரணையின் ஒரு பகுதியாகப் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது துறைரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான கல்வித்துறையின் விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



