நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டவர் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பின் (NDRRMA) தகவல்படி, வெள்ள பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்வராசி கிழக்கில் 207 உடல்களும், நவல்வராசி மேற்கில் 151 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், நுவாகோட் மாவட்டத்தில் 95 உடல்கள், கோர்காவில் 62, தாடிங்கில் 55, தனஹுவில் 37 மற்றும் ரசுவா மாவட்டத்தில் 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போடேகோஷி ஆற்றில் நீர்மட்டம் ஆபத்தான அளவில் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்குத் தொலைபேசி வழியாகப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், த்ரிசூலி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கோர்கா மாவட்டத்தையும் பிருத்வி நெடுஞ்சாலையையும் இணைக்கும் தொங்கு பாலம் ஒன்று முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு ஒரு “கற்பனை செய்ய முடியாத, இதயத்தை நொறுக்கும்” பேரழிவைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார். மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால்கள் நிலவுவதாகவும், இருப்பினும் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், நேபாளத்தில் உள்ள பிரேத பரிசோதனை அறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாளம் தெரியாத உடல்களிலிருந்து டி.என்.ஏ மாதிரிகளைப் சேகரித்த பிறகு, உடல்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று நேபாள அரசு சர்வதேச உதவிகளைப் பெறத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையும் சிறப்பு தடயவியல் நிபுணர்கள் குழுவும் நேபாளத்திற்குச் சென்றுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை டி.என்.ஏ மூலம் அடையாளம் காணும் பணிகளில், திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் நேபாள காவல் தடயவியல் துறையினருடன் இணைந்து இந்தியக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



