திரைப்படப் பணிகளுக்கு இடையே ஓய்வு எடுப்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகை த்ரிஷாவை, நபர் ஒருவர் அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை த்ரிஷா தனது தோழிகளுடன் இங்கிலாந்தில் விடுமுறையைக் கழித்து வருகிறார். லண்டனின் பிரபலமான சைனாடவுன் வீதிகளில் அவர் மிகவும் எளிமையான உடையில் (கருப்பு நிற ஜம்பர் மற்றும் நீல நிற ஜீன்ஸ்) தனது தோழிகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர், த்ரிஷாவிற்குத் தெரியாமல் அவரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
த்ரிஷாவின் இந்த இயல்பான வீடியோவைக் கண்டு பல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், ஒரு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு பிரபலமாக இருந்தாலும், பொதுவெளியில் தனது தனிப்பட்ட நேரத்தைச் செலவிடும்போது அவர்களை அனுமதியின்றிப் படம் பிடிப்பது அநாகரீகமானது என்றும், அவரது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
பயணங்களில் அதிக ஆர்வம் கொண்ட த்ரிஷா, நியூயார்க், இத்தாலி, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். குறிப்பாக, நியூயார்க் நகரத்தை தனது இரண்டாவது வீடு என்றே அவர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.



