சூறாவளிப் புயல்கள், கொடூர நிலநடுக்கங்கள், வரலாறு காணாத வெப்ப அலைகள், திடீரென உடைந்து சரியும் பனிப்பாறைகள் என 2026ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக தீவிரமான இயற்கை பேரழிவுகளின் ஆண்டாக உருவெடுத்து விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, உலக வரலாற்றில் பல பெரும் பேரிடர்கள் நிகழ்ந்த ’26’ என்ற தேதி, இந்த ஆண்டும் நேபாள பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ‘லா நினா’ வானிலை மாற்றத்தால் கொட்டித் தீர்த்த பெருமழை 200-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி லட்சக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியது.
அதனைத் தொடர்ந்து மடகாஸ்கர் நாட்டை 10 நாட்கள் இடைவெளியில் தாக்கிய ‘பிதியா’ மற்றும் ‘ஜிசானி’ ஆகிய இரட்டை சூறாவளிகள் பெரும் அழிவை ஏற்படுத்தின. மார்ச் மாதம் காங்கோ தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 சிறுவர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்த சோகம் உலகை உலுக்கியது. மேலும், நடப்பு கோடையில் ஐரோப்பா முழுவதும் வீசிய 4 கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தால் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் வழக்கத்தை விட 35,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெனிசுலா நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் சிக்கி 6,125 பேர் உயிரிழந்தது இந்த ஆண்டின் மிக மோசமான நிலநடுக்கப் பேரிடராகப் பதிவானது. தொடர்ந்து இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காராவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் 73,000 வீடுகளை தரைமட்டமாக்கியது. இதன் தொடர்ச்சியாக, நேபாள – திபெத் எல்லைப் பகுதியான லாங்டாங் லிருங்கில் பனிப்பாறை உடைந்து உருவான திடீர் பெருவெள்ளம் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது.
ஆறுகளை மறிப்பது, மலைகளைக் குடைவது போன்ற மனிதனின் அதீத இயற்கைச் சுரண்டலே இந்த தொடர் சீற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பதாகவும், இனியாவது இயற்கையுடன் இணக்கமான பாதையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் பூமி மீள முடியாத பேராபத்தை நோக்கிச் செல்லும் என்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.



