தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, டாஸ்மாக் பணியாளர்களின் 23 ஆண்டுகால சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அதிரடி ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகள் உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் அரங்கேறும் கூடுதல் கட்டண வசூல் (MRP விதிமீறல்) உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதே வேளையில், பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,689 என ஊதியம் கணிசமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. அத்துடன், பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் எனவும், 3 செட் சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
பணிச்சுமையை குறைக்கும் வகையில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரப் பணி வரம்பு, மாதத்திற்கு ஒரு நாள் பணி ஓய்வு மற்றும் மாதத்தில் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு (Casual Leave) போன்ற நலத்திட்டங்களும் நடைமுறைக்கு வருகின்றன. அதேவேளையில், மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி முதலில் இடைநீக்கமும் (Suspension), தவறு தொடர்ந்தால் நிரந்தர பணிநீக்கமும் (Dismissal) செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More : அதிர்ச்சி!!! 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! சாக்லேட் கொடுத்து அத்துமீறிய கேப் டிரைவர் கைது..



