தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து தற்போது ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ எனும் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். கட்சியை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 22 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.
மேலும், “எதிர்வரும் காலங்களில் மக்கள் ஒற்றுமை கழகத்தின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கான அரசியல் பலத்தை பெறுவோம். இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கிப் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.



