திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சின்ன காசம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மாயழகன் என்பவரது மனைவி சசிகலா (32). இவர் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ‘FQL’ ஆன்லைன் நிதித் திட்டத்தில், ஒரு சீட்டுக்கு ரூ.50,000 வீதம் மூன்று சீட்டுகளுக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். மேலும், தனது உறவினர்கள் சிலரையும் இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், FQL நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால், முதலீடு செய்த பணம் மொத்தமும் பறிபோனது.
இழந்த பண விவகாரம் தொடர்பாக நேற்று இரவு சசிகலாவிற்கும் அவரது கணவர் மாயழகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா, இன்று காலை அருகிலுள்ள மலைப்பகுதிக்குச் சென்று கொடிய விஷச் செடியை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே வந்து நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகன், உடனடியாகத் தனது ஆட்டோவில் ஏற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சசிகலா, அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முயன்ற சசிகலாவுக்கு வினோ (15), வினுஷ்கா (12), விஷ்ணு (14) என மூன்று பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே பலரை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய FQL ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில், பணத்தை இழந்த குடும்பப் பெண் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காசம்பட்டி மற்றும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


