இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்த சூழலில், நேற்று அதிகாலையில் அவருக்குத் திடீரெனத் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உடனடியாக விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், நேற்று மாலை 3 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த உரிய சிகிச்சைக்குப் பின்னர், அவரது தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் பெருமளவில் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதால், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என சிபிஐ மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருக்கா..? வனத்துறை எச்சரிக்கை..!! தவறினால் சட்ட நடவடிக்கை பாயும்..!!



