ஒரு காலத்தில் இந்திய குடும்பங்களில் அதிகம் அறியப்படாத ‘அவகேடோ’ பழம், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள் மற்றும் மக்களின் உணவு மேஜைகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பழமாகக் கருதப்பட்ட இது, தற்போது இந்தியாவின் ஆரோக்கியமான உணவு முறையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளதுடன், இந்திய விவசாயிகளாலும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புதிய வீடியோவில், இளைஞர்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த கார்பா வரதராஜ் என்ற விவசாயி, தனது நண்பரின் தோட்டத்தில் அவகேடோ பயிரைப் பார்த்தும், யூடியூப் வீடியோக்கள் மூலம் கற்றுக் கொண்டும் வெற்றிகரமாக அவகேடோ சாகுபடியில் ஈடுபட்ட கதையை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரதராஜ் என்ற அந்த விவசாயி தற்போது சுமார் 4 டன் அவகேடோ பழங்களை உற்பத்தி செய்து, உள்ளூர் கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார். நுகர்வோரின் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு, புதிய பயிர்களை தைரியமாக முயற்சிக்கும் விவசாயிகளுக்கு இதுபோன்று பெரிய வாய்ப்புகள் கதவைத் திறக்கின்றன என்பதை இவரது அனுபவம் காட்டுகிறது.
நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் ஜென் ஜி தலைமுறையினரிடையே ‘அவகேடோ டோஸ்ட்’ உணவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரெட்டின் மீது மசித்த அவகேடோ, மிளகுத் தூள், முட்டை அல்லது சீஸ் சேர்த்துச் செய்யப்படும் இந்த எளிய உணவு, அதன் சுவைக்காக மட்டுமின்றி புகைப்படங்களுக்கு அழகாக இருக்கும் தோற்றத்திற்காகவும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவகேடோ பழத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புச் சத்துகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக டோஸ்ட், சாலட், சாண்ட்விச் எனப் பல வடிவங்களில் சத்தான உணவாக மக்கள் இதைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
சமீபத்திய ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியிலும் இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “முன்பெல்லாம் இந்த பழத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது; இதற்கான தேவையும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று உணவகங்களில் இது பிரதான உணவாக உள்ளது” எனக் குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பழமாக இருந்த அவகேடோ, தற்போது இந்திய மண்ணிலேயே விளைவிக்கப்பட்டு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரும் புதிய பயிராக உருவெடுத்துள்ளது.



