GSLV-F17 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-05) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற காலை நேர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று 36,000 கி.மீ உயரத்தில் உள்ள பூமி சுழற்சிக்கு இணையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
‘விண்ணில் இந்தியாவின் கண்’ (Eye in the Sky) என்று அழைக்கப்படும் EOS-05, ஜி.எஸ்.எல்.வி ரக ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்ட மிகக் கனமான செயற்கைக்கோள் ஆகும். இது வேளாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மைக்குப் பயன்படும் நேரலைப் படங்களை வழங்கும். இதன் குறைந்தபட்ச ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டிருந்தாலும், இது 9 ஆண்டுகள் வரை சிறப்பான முறையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய நாராயணன், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட மனிதனில்லா விண்கலப் பரிசோதனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மனிதர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட 2-வது வெற்றிப் பயணம் இதுவாகும். நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் மேலும் 6 விண்கலன்களை ஏவ இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.
மற்ற செயற்கைக்கோள் திட்டங்களைப் போலன்றி, இதில் மனிதர்களின் பங்களிப்பு உள்ளதால், மனிதர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. எனவே, மனிதர்கள் இல்லாத மூன்று திட்டங்களுக்குப் பிறகு மனிதர்களை ஏற்றிச் செல்லும் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.”



