ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 10 ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த மனைவியை, கூடுதல் பணம் கேட்டு மூக்கு மற்றும் வாயை அழுத்தி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனிமேர்கா கிராமத்தை சேர்ந்த புங்கா சந்தியா (23), அதே பகுதியைச் சேர்ந்த ராம் முத்யாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் பணப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது செலவுகளுக்காக பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு சந்தியாவை முத்யாலா ராவ் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகளின் நல்வாழ்விற்காக சந்தியாவின் தாயாரும் பலமுறை பணம் கொடுத்து உதவியுள்ளனர்; இருப்பினும் கணவனின் பண ஆசை அடங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி காலை வீட்டில் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், படாபல்லி போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சந்தியாவின் மூக்கு மற்றும் வாயைப் பலவந்தமாக அழுத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, கணவன் முத்யாலா ராவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று தாய் வீட்டில் இருந்து பணம் கேட்டு வாங்கி வருமாறு சந்தியாவிடம் வற்புறுத்தியபோது அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்யாலா ராவ், “பொண்டாட்டியை விட எனக்குப் பணம்தான் முக்கியம்” என்று கத்திக் கூச்சலிட்டு, சந்தியாவின் மூக்கு மற்றும் வாயை அழுத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



