கனடா குடியுரிமை பெற்ற இலங்கை தமிழ் பெண் ஒருவரை ‘தோஷ நிவர்த்தி’ செய்வதாகக் கூறி, ஆடையின்றி பூஜை செய்ய வைத்து, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டிய 45 வயது கிளி ஜோசியரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றாலத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (45) என்ற கிளி ஜோசியரை, கடந்த வாரம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து அந்தப் பெண் சந்தித்துள்ளார். கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த அந்தப் பெண், தொலைக்காட்சி பாடல் போட்டி ஒன்றில் பங்கேற்பது தொடர்பாக ஜோசியரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது அப்பெண்ணுக்கு கடுமையான கிரக தோஷம் இருப்பதாக பயமுறுத்திய இசக்கிமுத்து, அதற்கு சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி ரூ. 70,000 கட்டணம் கேட்டுள்ளார்.
மேலும், நள்ளிரவில் தான் கோவிலில் பூஜை செய்யும்போது, அப்பெண்ணையும் வீட்டில் ஆடையின்றி வீடியோ காலில் வந்து பூஜையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆன்மீக நம்பிக்கையில் அதை உண்மை என நம்பிய அந்தப் பெண்ணும் அதேபோல் செய்துள்ளார்.
ஆனால் மறுநாளே, வீடியோ காலைப் பதிவு செய்து வைத்திருந்த இசக்கிமுத்து, அதை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் முதற்கட்டமாக ரூ. 20,000 அனுப்பியுள்ளார்.
இருப்பினும் ஜோசியர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், அப்பெண் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வங்கி கணக்கு மற்றும் கைப்பேசி எண்ணை வைத்து ஆய்வு செய்து, குற்றாலத்தில் தலைமறைவாக இருந்த இசக்கிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



