உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, உயிரினங்கள் அழிவது போன்ற மாற்றங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்குவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள ‘லிமிட்டிங் ஓவர்ஷூட்’ அறிக்கை, வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்துவதில் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதில் உலக நாடுகள் வேகமாக செயல்பட்டால் வெப்பநிலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஏற்கெனவே ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்கள் அனைத்தையும் அதே வேகத்தில் மாற்றிவிட முடியாது.
இதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் தீவிரமாக உணரப்படுகிறது. மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றம், நீண்டகால வறட்சி, திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான வெப்பநிலை ஆகியவை விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. இயற்கை பேரிடர்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் சூழலும் உருவாகிறது.
காலநிலை பாதிப்புகளில் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக பனிப்பாறைகள் உருகுவது உள்ளது. பூமியின் வெப்பநிலை பின்னர் குறைந்தாலும், ஏற்கெனவே உருகிய பனிப்பாறைகள் உடனடியாக மீண்டும் உருவாகாது. இதேபோல் கடல் மட்ட உயர்வும் வெப்பநிலை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் உடனடியாக நின்றுவிடாது. இதனால் கடலோரப் பகுதிகளும் சிறிய தீவு நாடுகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்.
உயிரினங்களின் அழிவும் இதேபோன்ற திரும்பப் பெற முடியாத இழப்பாக மாறுகிறது. அழிந்துபோன ஒரு தாவரம் அல்லது விலங்கினத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் உருவாக்க முயற்சி செய்தாலும், அது முன்பு வாழ்ந்த இயற்கைச் சூழலை முழுமையாக மீண்டும் உருவாக்குவது எளிதல்ல. இதனால் பல்லுயிர் இழப்பு சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களின் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாகிறது.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கும், வரலாற்றில் அதிக அளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிட்ட நாடுகளுக்கும் இடையே பொறுப்பு தொடர்பான விவாதமும் தொடர்ந்து வருகிறது. வளர்ந்த நாடுகள் அதிக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் ஒரு பகுதியாக உள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இனி எதிர்காலத்தில் மட்டும் நிகழும் பிரச்சனை அல்ல. உணவு உற்பத்தி முதல் குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அன்றாட வாழ்க்கையின் பல துறைகளையும் அது பாதிக்கத் தொடங்கியுள்ளது. வெப்பநிலை மேலும் உயர்வதற்கு முன்பே உமிழ்வைக் கட்டுப்படுத்துவது மட்டுமே திரும்பப் பெற முடியாத இழப்புகளை குறைப்பதற்கான முக்கிய வழியாக உள்ளது.
Also Read: “உங்களால தான் என் குழந்தை செத்தா!”… கதறி அழும் பெற்றோர்; 7 வயது சிறுமியின் மரணம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு!



