ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “யார் மீதும் பழிவாங்கும் நோக்கில் சும்மா பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முடியாது. போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவு செய்கின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அரசு பணிக்கு பணம் வாங்கி ஆள் சேர்த்த விவகாரத்தில் ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
முறைகேடுகள் மற்றும் கூட்டு சதி தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இரண்டு முறை ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது; இது குறித்து அவர்கள்தான் முழு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மின்வாரியத்தில் 45 டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த முறைகேடுகள் எந்த காலகட்டத்தில் நடந்தன என்பதை தெளிவாக கண்டறிந்து நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அரசுக்கு உரிய வலுவான ஆதாரங்கள் இருக்கும்போது வழக்குகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மக்களின் வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



