சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்குகள் ஏதுமில்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் களம் கண்ட மரகதம் குமரவேல் 69,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெகவில் இணைந்த அவருக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவரே களமிறக்கப்படுவாரா அல்லது கடந்த முறை 62,090 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் எழில் கேத்தரினுக்கு வாய்ப்பு தரப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் 81,100 வாக்குகள் பெற்று வென்ற சத்தியபாமா தவெகவில் இணைந்த நிலையில், தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக உள்ள அவருக்கே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுத்தேர்தலின் போது நிலவிய தவெக அலையையும் மீறி இந்த இரு தொகுதிகளையும் அதிமுக தன்வசப்படுத்தியதால், மீண்டும் அவற்றை வென்று தனது வாக்கு வங்கியை நிரூபிக்க அதிமுக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில், திமுகவும் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி உறுதியாகி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 6) துவங்குகிறது. செப்டம்பர் 16ம் தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, திரும்பப் பெற செப்டம்பர் 19 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
Read More : சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!!



