அரசியல் தலைவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அமைச்சரவைக் கொண்ட இந்த நாட்டில், தற்போது இந்த ஊதிய உயர்வு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின் மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அடிப்படை ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்) 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (27 கோடி ரூபாயாகும்) உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைப் பிரதமரின் சம்பளம் 1.87 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.06 மில்லியன் டாலராகவும் (ரூ.22.94 கோடி), அமைச்சர்களின் சம்பளம் மூப்பு மற்றும் துறைகளின் பொறுப்புக்கேற்ப 1.80 மில்லியன் முதல் 2.88 மில்லியன் டாலர் வரையிலும் உயர்த்தப்படும்.
தனது பதவிகாலத்தில் இந்தச் சம்பள உயர்வு மூலம் கிடைக்கும் முழுத் தொகையையும் பொருத்தமான நல்ல காரியங்களுக்குத் தானமாக வழங்கப் போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
சிறந்த தலைவர்களை ஈர்க்கவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த உயர்தர சம்பளம் அவசியமானது என்று இந்த வசதியான தீவு நாடும், நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியும் (PAP) வாதிட்டுள்ளன.
சுதந்திரமான குழுவின் பரிந்துரைப்படி இந்தச் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ளவர்கள் உடனடியாக முழுத் தொகையையும் பெற மாட்டார்கள்; அக்டோபர் 15 முதல் தனிப்பட்ட செயல்திறனைப் பொறுத்து 9 சதவீதம் வரை ஒருமுறைச் சரிசெய்தல் மூலம் வழங்கப்படும்.
பெரும்பாலான சாதாரண குடிமக்களை விட அமைச்சர்களின் வருமானம் பன்மடங்கு அதிகமாக இருப்பதால், அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமான இந்த விவகாரம் குறித்தும், நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு தரமான தலைமை எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இதேபோல் இந்திய பிரதமர் மோடியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


