கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. அண்ணன் பிண்டுவை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது தம்பி ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், பிண்டு வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவரது மனைவி பிரபாவதிக்கும் ராஜேஷுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்துள்ளது. சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பிண்டு மீண்டும் ஜார்க்கலட்டிக்கு திரும்பியுள்ளார்.
அன்று நள்ளிரவில் பிண்டுவுக்கும் ராஜேஷுக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜேஷ், கத்தியால் பிண்டுவின் மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார்.
கத்திக்குத்தில் காயமடைந்த பிண்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் தானாகவே மருந்து போட்டுக்கொண்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் அசைவின்றி கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிண்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பிண்டுவின் தம்பி ராஜேஷை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: எண்ணெய் கப்பல்களை குறிவைத்த அமெரிக்கா… பதிலடியில் இறங்கிய ஈரான்! வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்…



