டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பது தற்போது 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாக டாஸ்மாக் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். மீதமுள்ள 20 சதவீத முறைகேடுகள் எங்கு நடக்கிறது என தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கடந்த கால தவறுகள், புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலித்த புகாரில் ஏராளமானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு பணத்தை எப்படி முறைகேடாக எடுக்கக் கூடாதோ, அதேபோல நுகர்வோரின் பணத்தையும் யாரும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து எம்.ஆர்.பி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் இந்த மீறல்கள் நடந்தால், கடை ஊழியர்கள் மட்டுமின்றி மாவட்ட மேலாளர்களும் அதற்கு பொறுப்பேற்க நேரிடும் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் டாஸ்மாக் பார்கள் சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்த ஏகபோக நிலையை மாற்றி, அனைவருக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள், பொதுமக்கள் பாதிப்படையாத பகுதிகளில் பார்கள் அமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை இடமாற்றம் செய்யவும், புதிய கடைகள் 400 முதல் 500 சதுர அடிக்கு குறையாத பரப்பளவில் அமையவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
என் பெயரையோ, கட்சி பெயரையோ பயன்படுத்தி முறைகேடான வசூலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை பாயும். கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் என் பெயரை பயன்படுத்தி முறைகேடு செய்தவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கட்சிக்காரர்களா எனப் பார்க்கப்பட மாட்டாது; தவறு என்றால் தவறுதான். இதேபோல, டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைக்க பல மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விக்னேஷ் குறிப்பிட்டார்.
மதுபான உற்பத்தியைப் பொறுத்தவரை, கடந்த கால ஆட்சியைப் போல சிலருக்கு மட்டும் சாதகமாக இல்லாமல், உரிமம் பெற்றுள்ள 11 மதுபான ஆலைகளிடமிருந்தும் சமமாக கொள்முதல் செய்வதுதான் அரசின் திட்டமாகும். முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள ‘கரூர் கேங்’ மற்றும் சிண்டிகேட் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை முதல்வர் விரிவாக படித்து அறித்துள்ளார். இதுகுறித்து வெறும் பேச்சோடு நிறுத்தாமல், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன; விரைவில் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியாக தெரிவித்தார்.
Read More : இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க..!! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் கடும் கண்டனம்..!!



