டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 போக்குவரத்து விமானம் உள்ளிட்ட மூன்று ராணுவ விமானங்கள் நொய்டா விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கின. இந்த விமானங்களில் ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். வழக்கமாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விஐபி மற்றும் ராணுவ விமானங்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது நொய்டா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
புதன்கிழமை முழுவதும் இந்த மூன்று விமானங்களும் நொய்டா விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்திய பாதுகாப்புப் படையினரும் ரஷ்யக் குழுவினரும் இணைந்து இதற்கான பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். புதிய விமான நிலையம் தனது தொடக்கக் காலட்டத்திலேயே இத்தகைய முக்கிய ராஜதந்திர நிகழ்வுக்குக் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அதிபர் புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57 தயாரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் (BrahMos) சூப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யா தனது பாதுகாப்பு விநியோக ஒப்பந்தங்களை நிறைவேற்றும் எனத் தெரிவித்துள்ள நிலையில், பிரிக்ஸ் மாநாட்டையொட்டி நடக்கும் இந்த ராணுவ மற்றும் ராஜாங்க நகர்வுகள் உலக அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.



