தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார்.
பேச்சாற்றலாலும் இயல்பான நகைச்சுவையினாலும் பட்டிமன்றக் கலையைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
குன்றக்குடி அடிகளாரின் வழியில், பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் பட்டிமன்றங்களை நடத்தி, தமிழைப் பாமரரிடமும் கொண்டு சேர்த்தவர். உலகம் முழுவதும் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற இவர், திருக்குறள் உரை உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
திரைத்துறையிலும் தடம் பதித்த இவர், ‘புது வருஷம்’, ‘பாய்ஸ்’, ‘எஸ் மேடம்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் நடித்துத் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். “தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் செய்த அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில், 2021ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



