தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வரும் சூழலில், விரைவில் முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில், ஆந்திர அரசியலில் நீண்ட அனுபவம் வாய்ந்த நல்லாரி கிரண்குமார் ரெட்டியின் பெயர் முன்னணியில் அடிபடுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், பின்னர் அம்மாநிலத்தின் கடைசி முதலமைச்சராகவும் பதவி வகித்த இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வரும் இவருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடன் நல்ல நட்புறவு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தென் மாநில அரசியல் களம் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் பரந்த அனுபவம் கொண்ட கிரண்குமார் ரெட்டிக்குத் தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற யூகங்கள் தீவிரமடைந்து வந்தாலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பிலோ அல்லது கிரண்குமார் ரெட்டியின் அலுவலகத் தரப்பிலோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : முதல்வர் விஜய் அடுத்த பிரதமரா..? சூடான தமிழிசை சௌந்தரராஜன்..!! PM மோடி குறித்து என்ன சொன்னார் தெரியுமா..?



