ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த சின்னமாயாகுளம் கிராமம் அருகே உள்ள காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் இன்று காலை இரண்டு உடல்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இருவரும் மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் ஏர்வாடி போலீஸார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் கணேசன் (எ) ரியாசுதீன் என்பது தெரியவந்துள்ளது.
சடலங்கள் கிடந்த இடத்தின் அருகே காலி மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. இதனால் இருவரும் அளவுக்கு அதிகமாக விஷத்தன்மை கொண்ட மது அருந்தியதால் உயிரிழந்தார்களா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தனரா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவிக்கையில், “இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இருவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார். இந்த மர்ம மரண சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏர்வாடி, கீழக்கரை, மாயாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



