உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் மற்றும் கிளவுட் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 6 மணியளவில் நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவிலிருந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு, “இன்றே உங்களுடைய கடைசி வேலை நாள்” என்ற ஒரு வரிச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுக்கப்பட்ட இந்த அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் நிலைகுலைந்து போயினர். மேலும், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்களின் அலுவலக கணினி அணுகல் (System Access) மற்றும் உள்ளக சேவைகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை நிறுவனத்தில் தீவிரமாக ஒருங்கிணைக்கவும், உலகளாவிய டேட்டா சென்டர்களைப் பல பில்லியன் டாலர் செலவில் விரிவாக்கம் செய்யவும் ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் அதீத உட்கட்டமைப்புச் செலவுகளைச் சமன் செய்வதற்காகவும், ஏஐ சார்ந்த மறுசீரமைப்புப் பணிகளுக்காகவுமே ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே சுமார் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த ஆட்குறைப்பு உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சுற்றில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆரக்கிள் கிளைகளின் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் சூழலில், எத்தனை பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.



