முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கலைஞர் அவர்களால் 2009-ம் ஆண்டு துவங்கப்பட்டு இதுநாள் வரையில் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 15-09-2018 முதல் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுகிறது.
ஆண்டுதோறும் இதனை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- வரை குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ.5,00,000/- வரை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும் 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் 975 தனியார் மற்றும் 854 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 1829 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சமாக அதிக செலவாகும் 8 உறுப்பு மாற்று உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை. இருதய மாற்று அறுவை சிகிச்சை. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை. செவிப்புல மூளைத் தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தேவைப்படும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
முதலமைசரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இதில் பயன் பெறலாம்.